Monday, August 22, 2016

காமாட்சி குங்கும மகிமை




காமாட்சி குங்கும மகிமை
குங்கும மாவது குறைகளைத் தீர்ப்பது
குங்கும மாவது குடியினைக் காப்பது
குங்கும மாவது கணம தளிப்பது
குங்கும மாவது கொல்வினை தீர்ப்பது.

விதிதனை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனை காப்பது பதிவிரதை குங்குமம்
கதிதனை யாள்வதும் குங்கும மாமே.

தஞ்சமென்றோரைத் தடுத்தாண்டு கொள்வதும்
பஞ்ச மாபாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்சின பேருக் கபய மளிப்பதும்
காஞ்சி காமாட்சியின் குங்கும மாமே

நற்பத மீவது நாரணி குங்குமம்
பொற்பினை ஈவது பூரணி குங்குமம்
சிற்பரமாவது சிவகாமி குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்கும மாமே.

செஞ்சுடர் போல்வது சீரான குங்குமம்
கொஞ்சு மழலைக் கொடுப்பது குங்குமம்
அஞ்சு புலங்க ளடக்கி யருள்வதும்
காஞ்சி காமாட்சியின் குங்கும மாமே.

நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்சித்த குங்கும மாமே.

சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்கும மாமே.

நெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள்வதும்
செஞ்சொற் கவிபாடுஞ் சீரினை யீவதும்
வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்
காஞ்சி காமாட்சியின் குங்கும மாமே.

சிவசிவ என்றுத் திருநீறணிந்த பின்
சிவகாமி யேயெனச் சிந்தித்தணிவதும்
தவமான மேலோருந்தரித்துக் களிப்பதும்
பவவினை தீர்ப்பதும் குங்கும மாமே.

எவையெவை கருதிடில் அவையவையீவதும்
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்குக்
குவிநிதி யீவதும் குங்கும மாமே.

அஷ்ட லட்சுமி அருள தளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டந் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும்
சிஷ்டராய்ச் செய்வதும் குங்கும மாமே.

குஷ்டம் முதலான மாரோகந் தீர்ப்பதும்
நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினைக்
கிட்டவே செய்வதும் குங்கும மாமே.

பட்டகாலிலே படுமெனக் கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணிந்தே
இட்டார் இடர் தவிர் குங்கும மாமே.

சித்தந்தனைச் சுத்தி செய்வதற்கெளியதோர்
எத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழுதன்னை குங்குமந்தன்னை
நித்தம் தரித்துமே வீட்டை வீரே.

மிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகொள்
செஞ்சுடராகுமோர் காஞ்சி காமாட்சியின்
கஞ்ச மலர் முகந்தன்னிற் றிகழ்வதும்
பஞ்ச நிதி தரும் குங்கும மாமே.