Thursday, August 13, 2015

ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்



ஸ்ரீ ஹரி:
ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளைகமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான் ஓர்
காளைபுகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

இந்திரனுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடியுடித்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

நால்திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத் தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண்கட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர்தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலைதொட்டு எங்கும்
அதிரப்புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

வாய்நல்லார் நல்லமறையோதி மந்திரத்தால்
பாய்சிலை நாணல்படுத்துப் பரிதி வைத்து
காய்சினமா களிறன்னான் என்கைப்பற்றி
தீவலஞ்செய்யக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

இம்மைக்கும் ஏழேழ்பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாரயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான். 

வரிசிலைவாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம்பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என்கைவைத்து
பொரிமுகந்தட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

குங்கும மப்பிக் குளிர்சாந்த மட்டித்து
மங்கலவீதி வலஞ்செய்து மணநீர்
அங்கு அவனோடும் உடன்சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதைசொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே.